பாணினி மாமுனிவர்
கல்லைப் போல் வறட்சியான மொழி அறிவியலை வாடாத
மணமுள்ள மலராக்கியவர் பாணினி. பாணினியின் அஷ்டாத்யாயி, நவமணிகள் நன்கு
பதித்த ஒரு பெரிய அணிகலன். 395 சூத்திரங்களில் சம்ஸ்கிருதத்தின் சொல்வளம்
முழுவதையும் நுணுக்கமாக அமைத்தார் பாணினி. எந்த மொழியிலும் பெயரும்
வினையும் முக்கியமான சொல்வகைகள், ஒரே விகுதி கொள்ளும் பல சொற்கள் ஒரு
விதிக்குள்ளே அடங்குவதை பாணினி கண்டார். வகை வகையான விதிகளுக்குள் அடங்கும்
இத்தகைய பெயர்ச் சொற்களைக் கூட்டங் கூட்டமாக வகைப்படுத்தினார்.
பெயர்ச்சொற்களின் இக்கூட்டத்துக்கு, கணபாடம் என்பர், உதாரணமாக நத்யா திப்யோ
டக் என்ற சூத்திரத்தால், நதியில் உண்டானது - நாதேயம் என்றாகிறது. இது போல,
சம்ஸ்கிருதத்திலுள்ள சொற்கள், 2115 தாதுக்களைக் (வினைவேர்களை) கொண்டு
இயங்குவதை பாணினி கண்டார். இவற்றை அவர் பத்துப் பிரிவுகளாகத் தொகுத்தார்;
தாதுக்களும் அவற்றின் அர்த்தங்களும் அடங்கிய இத்தொகுதி தாதுபாடம்
எனப்படும். பெயர்ச் சொற்களில் வரும் வேற்றுமை விகுதிகளை பாணினி ஒரே
சூத்திரத்தில் ஸு என ஆரம்பித்து ப் என்று முடித்தார். அதனால் இதற்கு ஸுப்
என்று பெயர். இப்படிப் பல எழுத்துக்களை சூத்திரத்திலிருந்து சுருக்கின்
கூறும் முறை ப்ரத்யாஹாரம் என்ப்படும். இப்படி வினை விகுதிகள் எல்லாம் ஒரே
சூத்திரத்தில் தி என்று தொங்கி ங் என முடிக்கிறார். அதனால் இதற்கு திங்
என்று பெயர். ஸுப்திஙந்தம் பதம். ஸுபதம் என்பது பெயர்ச்சொல்; திஙந்தம்
என்பது வினைச்சொல்.
பெயரடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு தத்திதம் என்றும், வினையடியாக வந்த
பெயர்ச் சொல்லுக்கு க்ருதந்தம் என்றும் பெயர். இப்படி சம்ஸ்கிருத
மொழியிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்து அறிவியல் முறையில்
இலக்கணத்தை அமைத்தவர் பாணினி. அதனால்தான் பதஞ்சலி, பாணினி சூத்திரத்தின்
அமைப்பில்தான் என்ன அழகு ! என வியக்கிறார். உழைப்பும் ஆராய்ச்சியும் :
பிற்காலத்தில் வியாகரணத்துக்குத் தம்மையே மக்கள் ஆதாரமாகக் கொள்வார்கள்
என்று தமது பொறுப்பை நன்கு உணர்த்த பாணினி, தர்ப்பத்தை அணிந்து தூய
கையினராக, கிழக்கு முகமாக அமர்ந்து, ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும்
பேருழைப்புடனும் அஷ்டாத்யாயியை இயற்றினார் என மஹா பாஷ்யகாரரான பதஞ்சலி
குறிப்பிடுகிறார். பாணினி வாக்கு : பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத மொழியை
மட்டுமின்றி, பழங்காலக் கல்வெட்டுக்களையும் நாணயங்களையும் போல் பாரதப்
பண்பாட்டைப் பற்றியும் அறிவதற்கு முக்கியச் சான்றாகத் திகழ்கிறது. பாணினி
தாம் கண்ட ஐநூறு ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த ஊர்கள்
அத்தனையும் இன்றும் இருக்கின்றன. பாணினி மக்களின் வாழ்க்கையை நேரில்
கண்டவர். வாழ்வில் நாம் அன்றாடம் வழங்கும் சொற்களைப் பாணினி விளக்கும் முறை
எளிது. பாணினி இலக்கணம், உலகம் கண்ட இலக்கியப் படைப்புகளுள் மிகச்
சிறந்தது; பாணினியின் வியாகரணம்உண்மையிலே சமஸ்கிருதத்தின் ஒரு வகையான
இயற்கைச் சரித்திரம் என்றார் கோல்ட்ஸ்டுகர்.
அக்காலத்திய பல மொழிகளில் பாணினி வல்லவர்; பாணினியின் வாக்கு, இன்றும்
உலகெங்கும் பெருவழக்காக நீடித்திருந்து, மேலோங்கி வாழ்கிறது - பாணிநீ சப்தோ
லோகே ப்ரகாசதே என்று காசிகாகாரர் சொன்னது எவ்வளவு உண்மை ! தம்மையே தந்தவர்
: பாடலிபுத்திரத்துக்குப் புறப்பட்ட நாளிலிருந்து தமது இறுதி நாள்
வரையில், பாணினி சொல்லுலக யாத்திரிகராகவே வாழ்ந்தார். பல மாணவர்களுக்கு
பாணினி பாடம் கூறி வந்தார். அவரது மாணவர்களில் முக்கியமானவர் கௌத்ஸர். ஒரு
நாள் மாலை, காட்டில் சீடர்களுக்கு பாணினி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
நீரருந்த ஒரு புலி ஏரிக்கு வந்தது. புலி வருவதைக் கண்ட மாணவர்கள் மரங்களில்
ஏறிக்கொண்டனர். பாணினி புலியைப் பார்த்தார். ஆனால் அவர் அசையவில்லை.
அசைவனவும் நிற்பனவுமான இந்த உலகை விழுங்கி ஆட்கொள்ளும் பரம்பொருளே
புலியுருவில் நம்மிடம் வருகிறது - அத்தா சராசரக்ரஹணாத் என் அவர் கருதினார்.
அக்கணத்திலும், புலியைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பற்றி அவர் ஆராய்ந்தார் !
புலிக்கு வ்யாக்ர : என்று பெயர். காட்டு விலங்குகள் எல்லாவற்றுக்குமே
மோப்பச் சக்தி உண்டு. புலிக்கு அது சிறப்பாக அமைந்தது. புலி சுற்றிச்
சுற்றி வந்து மோப்பம் பிடிப்பதால், வ்யாஜிக்ர தீதி வ்யாக்ர: - வ்யாக்ரம்
என்று அதைச் சொல்கிறார்கள் என அவர் கண்டுபிடித்தார். இறக்கும் தறுவாயிலும்
உலகுக்கு ஒரு சொல்லின் தன்மையை அவர் உணர்த்திச் சென்றார். பாணினி
சிங்கத்துக்கு இரையானதாகப் பஞ்ச தந்திரம் கூறும். பாணினி உடலை உகுத்த தினம்
திரயோதசி என்பர். மாதமும் பக்ஷமும் தெரியாமையால், இன்றும் காசி முதலிய
இடங்களில் ஒவ்வொரு திரயோதசியையும் வியாகரணம் பயிலாத (அநத்யயன) தினமாக
வைத்துள்ளார்கள். மக்கள் அறியாமையுடன் பேசும் சொற்களிலுள்ள குறைகளை, பாணினி
புனிதமாக்கி, மங்கலச் சொற்களை வழங்க வைத்து, மக்களின் அறியாமையை அறவே
நீக்கினார். அந்த மாமுனி பாணினியை நாம் வணங்குவோம்.
|
Saturday, 3 March 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment